பிரதமரின் ஜன்தன் யோஜன திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் ஓவர் டிராப்ட் வசதியை ₹5 ஆயிரத்திலிருந்து ₹10 ஆயிரமாக உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தி முடிவு செய்யப்பட்டது. சாதாரண மக்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டில் மொத்தம் 32.41 கோடி பேர் இந்த கணக்குகளை தொடங்கினர். அவற்றில் இதுவரை₹81,200 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றதால், இத்திட்டத்தில் மேலும் சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘‘பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றி திட்டமாக உள்ளது. இதனால் இத்திட்டத்தில் மேலும் சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்கின் கால அளவை 4 ஆண்டுகளில் இருந்து ஆயுள் முழுவதும் வைத்துக் கொள்ளும்படி மாற்றப்படுகிறது. மேலும், இக்கணக்கில் ஓவர் டிராப்ட் வசதி மூலம் வழங்கப்படும் பணம் ₹5 ஆயிரத்திலிருந்து ₹10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது’’ என்றார். வங்கி கணக்கில் பராமரிக்கப்படும் 4 மாத சராசரி இருப்புத் தொகை, 6 மாத பரிவர்த்தனை ஆகியவற்றுக்கேற்ப ஓவர் டிராப்ட் வசதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.