Vetrikodikattucommerce
Tuesday 24 October 2017
Monday 23 October 2017
Saturday 21 October 2017
+1 வணிகவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்-விடைகள் ஆடியோ வடிவில்
பாடம் 1: அறிமுகம்
https://youtu.be/_J3y5UgVk0k
பாடம் 2:உள்நாட்டு வியாபாரம்-1
https://youtu.be/wnjJ0oN7P-U
குரலும்,ஆக்கமும்...
ப.கார்த்திகேயன்,
வணிகவியல் ஆசிரியர்,
அரசுமேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,கரூர் மாவட்டம்.
செல்: 99 431 49 788
Vetrikodikattucommerce
Monday 16 October 2017
Sunday 15 October 2017
Saturday 14 October 2017
ஏற்றுமதி உயர்வு! வர்த்தகம் குறைவு!
அனைத்து முக்கியப் பொருட்களின் ஏற்றுமதியும் செப்டம்பர் மாதத்தில் 25.67 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'பொறியியல் சாதனப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய 10 பொருட்கள் தான் ஏற்றுமதியில் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. தொடர்ந்து 13 மாதங்களாக ஏற்றுமதி வளர்ச்சியைக் கண்டுவருகிறது. பொருட்களின் அளவு அதிகரித்து வந்தாலும், அதன் வர்த்தக வளர்ச்சி மதிப்பு குறைவாகத் தான் உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் பொருட்களின் ஏற்றுமதி அளவு 25.67 சதவிகிதம் அதிகரித்தாலும், வர்த்தகத்தின் மதிப்பு 0.95 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தை விட 8.98 பில்லியன் டாலர் மட்டுமே ஏற்றுமதி அதிகரித்துள்ளது (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இறக்குமதியைப் பொறுத்தவரையில் செப்டம்பர் மாதத்தில் 18.09 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, 37.59 பில்லியன் டாலர் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதேசமயம், கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி 5 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.’
இதுபற்றி இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் டி.எஸ்.பாஷின் கூறும்போது, "சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஏற்றுமதி வர்த்தகத்தைப் பாதித்துள்ளது. இதிலிருந்து இந்தியா கட்டாயம் மீண்டு வரும்" என்றார். பொறியியல் சாராத பொருட்களின் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எண்ணெய் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டுடன் (2016) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 18.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம்!
இந்தியாவிலேயே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் முதல்வரின் பரிசீலனையில் உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல், கல்வித்துறையில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்து வருகிறார். மாணவர்களுக்கு சீருடை மாற்றம், ஸ்மார்ட் வகுப்பறைகள், பாடத்திட்டத்தில் மாற்றம், நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு கையேடு புத்தகம் என பல்வேறு சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் இன்று (அக்டோபர் 14) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், நாட்டிலேயே முதல் முறையாகப் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இந்தத் திட்டம் தற்போது முதல்வர் பழனிசாமியின் பரிசீலனையில் உள்ளது.
அதேபோல், பள்ளி மாணவர்களுக்கு டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். ஸ்மார்ட் கார்டுடன் மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டமும் கொண்டு வரப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவது என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
கோடிகளை மிச்சமாக்கிய ஆதார் திட்டம்!
ஆதார் திட்டத்தால் அரசுக்கு ரூ.59,000 கோடி வரையில் மிச்சமாகியுள்ளதாக நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஆதார் திட்டத்தில் சுமார் 100 கோடி மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டமானது தற்போதைய மோடி அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆதார் திட்டத்தை வடிவமைத்தவரும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமுமான இன்ஃபோசிஸின் தலைவருமான நந்தன் நிலேகனி ஆதார் திட்டத்தின் பயன்கள் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றபோது பேசினார்.
குடும்ப அட்டையில் திருத்தங்கள் - சிறப்பு முகாம்
சென்னை முழுவதும் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.
குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் குறைதீர் கூட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி சென்னையில் 17 மண்டலப் பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண அந்தந்த மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்திலேயே குறைதீர் கூட்ட முகாம்கள் இன்று நடைபெற உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், கைப்பேசி எண் திருத்தம், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது பற்றியும் குறைகள் ஏதும் இருந்தால் நுகர்வோர் அவற்றைத் தெரிவிக்கலாம்.
Friday 13 October 2017
பயனுள்ள அஞ்சலகத் திட்டங்கள் பற்றி தெரியுமா?
வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
`செல்வ மகள் சேமிப்புக் கணக்கு, பொன் மகன் பொது வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம்' எனக் குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன.
1. செல்வ மகள் சேமிப்புக் கணக்கு!
இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கைத் தொடங்கலாம். இந்திய அஞ்சலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் இத்திட்டத்தைத் தொடங்கலாம். ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.
2. பொன் மகன் பொது வைப்பு நிதி!
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் பொதுவான ‘பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்ச முதலீடாக 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.
3. தொடர் வைப்புக் கணக்கு!
மாதாந்திர சேமிப்புக்காக தொடர் வைப்புக் கணக்கு (Recurring Deposit (RD) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் என்று ஒன்றும் இல்லை, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை.
4. கால வைப்புக் கணக்கு!
குறைந்த கால சேமிப்புக்காகக் கால வைப்புக் கணக்கு (Time Deposit (TD) Account) தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம் 2 வருடங்களுக்கு 7.1 சதவிகிதமும், 3 வருடங்களுக்கு 7.3 சதவிகிதமும், 5 வருடங்களுக்கு 7.8 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
5. முதியோருக்கான சேமிப்புத் திட்டம்!
அதிகபட்ச வட்டியுடன் வருமான வரிச் சலுகையும் (80C) பெற முதியோருக்கான சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account)தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
6. மாதாந்திர வருமானத் திட்டம்!
நிலையான மாத வருமானத்துக்கு மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme (MIS) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு மேற்கொள்ளலாம்.
7. தேசிய சேமிப்புப் பத்திரம்!
வருமான வரிச் சலுகை (80C) பெறத் தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificates -NSC) திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்து வருடங்கள் வட்டி 8 சதவிகிதம் வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை.
8. கிஸான் விகாஸ் பத்திரம்!
112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை.
`அதிக வட்டி, அதிக லாபம்' தருகிறேன் என்று யார் சொன்னாலும், எந்த நிறுவனம் சொன்னாலும் நம்பாதீர்கள். அலசி ஆராய்ந்து அதன் பின்னே முதலீட்டினைத் தொடங்குங்கள். நம் ஊரில் வங்கிச் சேவை இல்லாத கிராமம்கூட இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அஞ்சல் அலுவலகம் இல்லாத எந்த ஒரு கிராமமும் இல்லை. இன்றும் ஏதோ ஒரு மூலையில் தனது சிறகினை விரித்து சேவையை வழங்கி வருகிறது. வங்கிகளைப்போல பரிவர்த்தனைக் கட்டணம், மினிமம் பேலன்ஸ் என்று எந்த ஒரு நெருக்கடியும் அஞ்சல் சேமிப்புக் கணக்கில் இல்லை. 50 ரூபாய்தான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் சேமிப்புக் கணக்குபோல, குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் துறையில் இருக்கின்றன. நாளைய பாதுகாப்புக்கு இன்றே சேமிக்கத் தொடங்குங்கள். உங்களுடைய ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.
Thursday 12 October 2017
வரி சேமிப்பதற்காக எல்.ஐ.சி கொண்டு வரும் இன்சுரன்ஸ் திட்டங்கள்
தற்போது வருமான வரி சேமிப்பதற்கு முதலீடுகளை செய்யும் காலம் என்பதால் நேரத்திற்கு ஏற்றவாறு எல்.ஐ.சி இரண்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.
அந்த இரண்டையும் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்..
முதல் திட்டத்தின் பெயர். Jeevan Labh Plan 836.
இது ஏற்கனவே இருக்கும் வழக்கமான இன்சுரன்ஸ் திட்டம் போன்றது.
என்ன வித்தியாசம் என்றால், வழக்கமான திட்டங்களில் 20 வருடங்களுக்கு பரீமியம் செலுத்தினால் 20 வருடங்களுக்கு தான் காப்பீடு பொருந்தும்.
ஆனால் இந்த திட்டத்தில் பரீமியம் செலுத்திய வருடங்களுக்கு பின்னரும் காப்பீடு சில வருடங்கள் தொடரும்.
அதாவது 16 வருடங்களுக்கு பரீமியம் செலுத்தினால் 25 வருடங்களுக்கு காப்பீடு பயனைப் பெறலாம். இதே போல் 10 வருடங்களுக்கு பரீமியம் கட்டினால் 16 வருடங்களுக்கும், 15 வருடங்களுக்கு கட்டினால் 21 வருடங்களுக்கும் காப்பீடு தொடரும்.
காப்பீடு காலம் முடிந்த பிறகு காப்பீடு தொகை, ஒவ்வொரு வருடம் வழங்கப்பட்ட போனஸ், இறுதி போனஸ் போன்றவற்றை சேர்த்து பெறலாம்.
அதே நேரத்தில் காப்பீடு காலத்தில் இறந்து விட்டால் அவரது உறவுகள் காப்பீடு தொகை, அதுவரை கொடுக்கப்பட்ட போனஸ் தொகை போன்றவற்றை பெறலாம்.
இந்த திட்டத்தில் குறைந்த பட்ச காப்பீடு தொகை இரண்டு லட்ச ரூபாய்.
உதாரணத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் காப்பீடிற்கு வருடத்திற்கு 23,000 என்று 16 வருடங்களுக்கு பரீமியம் கட்டினால் 25 வருடங்களுக்கு பிறகு 13 லட்ச ரூபாய் மொத்தமாக கிடைக்கும்.
அடுத்த இரண்டாவது திட்டத்தின் பெயர். Shikhar Plan 837.
இது மேலை நாடுகளில் உள்ளது போல் முழுமையான இன்சுரன்ஸ் திட்டம். இதில் நாம் செலுத்தும் பணம் திருப்பிக் கிடைக்காது. அதனால் முதலீடு திட்டம் போல் கருத முடியாது.
அதே நேரத்தில் காப்பீடு காலத்தில் இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் செலுத்திய தொகையில் இருந்து பத்து மடங்கு அதிக பணம் குடும்பத்திற்கு கிடைக்கும்.
இந்த திட்டத்தில் பரீமியம் என்பது ஒரு முறை மட்டும் தான் கட்ட வேண்டும்.
இந்த திட்டத்தில் குறைந்த பட்ச பரீமியம் தொகை ஒரு லட்ச ரூபாய். அதிக பட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்.
உதாரனத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் பரீமியம் செலுத்தினால் நமது காப்பீடு காலத்தில் நிகழும் துயர நிகழ்வுகளின் பின் உறவுகள் இருபது லட்ச ரூபாய் காப்பீடு தொகையாக பெறுவார்கள்.
இந்த இரண்டு திட்டங்களுமே வருமான வரி விலக்கு பலனைப் பெறுகின்றன. பரீமியம் தொகையும் மற்ற நிறுவனங்களை விட பரவாயில்லை. அதனால் இன்சுரன்ஸ் திட்டம் வேண்டுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தாண்டு ஜி.டி.பி., 7 சதவீதமாக குறையும்: உலக வங்கி மதிப்பீடு
‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றின் தாக்கத்தால், இந்தாண்டு, ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதமாக குறையும்’ என, உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது.
இது குறித்து, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2015ல், இந்தியாவின், ஜி.டி.பி., 8.6 சதவீதமாக இருந்தது; இது, இந்தாண்டு, 7 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, மத்திய அரசு மேற்கொண்ட, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கமே காரணம். அதே சமயம், மத்திய அரசு மேற்கொள்ளும் எண்ணற்ற சீர்திருத்தங்களும், அரசு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடும், பெருகி வரும் தனியார் முதலீடுகளும், 2018ல், ஜி.டி.பி., வளர்ச்சியை, 7.3 சதவீதமாக உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!
ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து, 75.6 மில்லியன் முறை டிஜிட்டல் வழியில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இதுகுறித்து அந்த அறிக்கையில், ‘உடனடி கட்டணச் சேவை (ஐ.எம்.பி.எஸ்), பீம், டெபிட் கார்டுகள் போன்றவற்றின் வாயிலாகக் கட்டணம் செலுத்துதல் அதிகரித்துள்ளது. இதன் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 75.6 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு ஜூலை மாதத்தில் 69 மில்லியனாகவும், ஜூன் மாதத்தில் 65.8 மில்லியனாகவும் இருந்தது. வங்கி-வங்கி மூலமான கட்டண பரிவர்த்தனையே வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏ.டி.எம்கள் வாயிலான பரிவர்த்தனை 1.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் இதன் அளவு 1.07 பில்லியனாக இருந்தது.
அதேபோல வங்கிக் கணக்குகள் மூலம் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால், மொபைல் வாலட்டுகள் வாயிலான பரிவர்த்தனை ஆகஸ்ட் மாதத்தில் 4.2 சதவிகிதம் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மொபைல் வாலட்டுகள் வாயிலான பரிவர்த்தனைகள் 225.4 மில்லியனாகும். ஜூலை மாதத்தில் இதன் அளவு 235.4 மில்லியனாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ரக்சா பந்தன், விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம் போன்ற பண்டிகைகள் இருந்ததால் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை நிறுவனங்கள் வழங்கியிருந்தன. இதனால் டிஜிட்டல் முறையிலான பரிமாற்றம் அதிகரித்தது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதமும் தொடர்ச்சியாகப் பண்டிகைக் காலம் என்பதால் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன? - ராகேஷ் தப்புடு
பணமில்லாப் பொருளாதாரத்தை உருவாக்குவது பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கங்களுள் முக்கியமான ஒன்றாக இருப்பதாக மத்திய அரசு பல நிகழ்வுகளில் தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களின் செயலாளர்களுடன் அண்மையில் பிரதமர் மோடி கலந்துரையாடுகையில், “பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பு பணத்துக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இருந்த விகிதம் 12 சதவிகிதமாக இருந்தது. பண மதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு இவ்விகிதம் 9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது” என்று பேசியிருந்தார். ஆனால், பண மதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 11 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்புதான் என்ன?
ஒவ்வொரு வாரமும் ரிசர்வ் வங்கி வெளியிடும் அறிக்கையில் இதுகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் வரையில், புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளும், பொதுமக்களிடத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளும், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன் இருந்த அளவில் 88 சதவிகிதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.
வாரவாரம் ரிசர்வ் வங்கி வெளியிடும் வாராந்திர புள்ளி விவர அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் சொத்துகள், பொறுப்புகள், அந்நிய செலாவணி இருப்பு, பட்டியலிடப்பட்ட வணிக வங்கியின் தொழில், பண இருப்பின் அளவு, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு உள்ளிட்டவை அடங்கிய பல தகவல்கள் வெளியிடப்படும்.
ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி, புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள், ரூபாய் நாணயங்கள், சிறிய நாணயங்கள் ஆகியவை ஒன்றாகச் சேர்த்தே புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு கணக்கிடப்படுகிறது. புழக்கத்தில் இருக்கும் பணத்திலிருந்து வங்கிகளிடமிருக்கும் பணத்தைக் கழிப்பதன் மூலம் பொதுமக்களிடம் இருக்கும் பணத்தின் அளவு கணக்கிடப்படுகிறது.
பண மதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நவம்பர் 4, 2016 வரையில் புழக்கத்தில் இருந்த மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 17.97 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பண மதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டதால், புழக்கத்தில் இருந்த மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. ஜனவரி 6, 2017 அன்று இதன் மதிப்பு 8.98 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது.
2016ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகச் சரிவடைந்துள்ளது இதுவே முதன்முறையாகும். புதிய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகமானதால் ஜனவரி மாதம் முதல் புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் மதிப்பு ஜூன் மாதத்தில் 15 லட்சம் கோடியைக் கடந்தது. செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இந்த மதிப்பு 15.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இத்தொகை பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன் இருந்த 88 சதவிகிதத்தை விடச் சற்று அதிகமாகும்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன், புழக்கத்தில் இருந்த மொத்த பண மதிப்பில் பொதுமக்களிடம் இருந்த பணத்தின் விகிதம் 95.7 சதவிகிதமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், புழக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு 100 ரூபாயிலும், 95.7 ரூபாய் மக்களிடமும், 4.3 ரூபாய் வங்கிகளிடமும் இருக்கிறது.
இந்த மதிப்பு 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் (பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்படத் தொடங்கிய பின்) 76.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. புதிய நோட்டுகளின் புழக்கம் அதிகரித்த பின் ஜனவரி மாதத்தில் இந்த விகிதம் 90 சதவிகிதமாகவும், செப்டம்பர் மாதத்தில் 95 சதவிகிதமாகவும் அதிகரித்துவிட்டது.
பண மதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகையின் மதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டது. பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு (நவம்பர் 11, 2016ஆம் தேதியின் கணக்குப்படி) வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு சுமார் 108 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த மதிப்பு மார்ச் 31, 2017 அன்று (பழைய ரூபாய் நோட்டுகளைச் செலுத்துவதற்கான கடைசி நாள்) 115.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
பிறகு, வங்கிகளில் செலுத்தப்படும் தொகையின் மதிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தின் இடையில் 114.5 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்திருந்தது. 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்துக்கும் 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், டைம் டெபாசிட்டுகளில் 4.5 லட்சம் கோடி ரூபாயும், டிமாண்ட் டெபாசிட்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாயும் அதிகரித்துள்ளது.
நன்றி: ஃபேக்ட்லி
தமிழில்: அ.விக்னேஷ்
ஜி.எஸ்.டி: வரி செலுத்திய தொழில் நிறுவனங்கள்!
சுமார் 66 சதவிகித தொழில் நிறுவனங்கள் ஜூலை மாதத்துக்கான வரி ரிட்டன்களைக் கால அவகாசத்துக்குள் தாக்கல் செய்துள்ளன.
ஜூலை மாதத்துக்கான ஜி.எஸ்.டி. ரிட்டன்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 10ஆம் தேதி நீட்டிக்கப்பட்டிருந்தது. வரி விதிப்புக்கு உட்பட்டவர்களில் 66 சதவிகிதப் பேர் தங்களின் விற்பனை குறித்து விரிவான ரிட்டன்களைத் தாக்கல் செய்துள்ளனர். வரி விதிப்புக்குரிய நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 65 லட்சமாகும். அதில் சுமார் 42 லட்சம் நிறுவனங்கள் ஜூலை மாதத்துக்கான ரிட்டன்களை அக்டோபர் 10ஆம் தேதி மாலை ஆறு மணி வரையில் தாக்கல் செய்துள்ளன. ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 10 நள்ளிரவுடன் முடிந்தது.
ஜூலை மாதத்துக்கான ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. அறிவிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்படவில்லையென்றால், உள்ளீட்டு வரிக் கடன் பெறுவதில் அவர்கள் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி வரையில் 30 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதிக்குப் பிறகு சுமார் 13 லட்சம் ரிட்டன்கள் கூடுதலாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.